Saturday, December 3, 2011

சிற்பி மாமா

     கவிஞர் சிற்பி அவர்களின் பாச விரல்களைப் பிடித்து நடந்த எனக்கு அவரைப் பற்றி எழுதுவது என்பது ஒரு கவிஞன் சிறந்த கவிதைகளைப் படிப்பதில் மகிழ்ச்சி கொள்வது போல மிக்க மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. எனவே தான் திரு. சேதுபதி அவர்கள் தொலைபேசியில் கூறியவுடன் என் மகிழ்வின் எல்லைக்கு வரையறை இல்லை என்றே சொல்ல வேண்டும்.
 என் மூச்சுக் காற்று இப்பூவுலகைத் தொட்ட நாள் முதல் இன்று வரை எனக்கு வாழ்வில் கிடைத்த மிகப்பெரும் பேறாகக் கருதுவது என் தந்தையாருக்கு அமைந்திட்டதொரு அருமையான நண்பர்கள். என் அப்பாவின் நட்புக்கள் எனும் நெடிய பயணம் என் உயிர் உள்ளவரை தொடர்ந்திடும் என்பதை நிரூபிக்கும் விதமாக அமைந்ததுதான் கவிஞர் சிற்பி அவர்களின் பவள விழாவிற்கான வாழ்த்துகளைப் பதிவு செய்வதற்குக் கிடைத்த அரிய வாய்ப்பாகக் கருதுகிறேன்.
      கவிஞர் சிற்பி அவர்களை நான் என் இளம்பருவம் முதல் பலமுறை சந்தித்திருக்கிறேன். என் தந்தையார் அவர்கள் ‘சிற்பி மாமா' என்று எனக்கு முதன்முறையாக அறிமுகப்படுத்திய அடுத்த விநாடியே கவிஞர் அவர்கள் என்னை அருகில் அழைத்து தட்டிக்கொடுத்த அந்த பாசத்தின் விதை என் நெஞ்சில் பத்திரமாக உறைந்துள்ளது.
      என் தந்தையார் கவிஞர் மீரா அவர்களுக்கும் கவிஞர் சிற்பி அவர்களுக்கும் உள்ள உறவு ஆழமான பாசமும் நேசமும் கலந்திட்டதொரு மென்மையான உணர்வு. நட்பு என்பதன் விளக்கத்திற்கான பாசத் திறவுகோல். என் அப்பாவும் கவிஞர் சிற்பி அவர்களும் பேசிக்கொள்ளும் விநாடிகள் எல்லாம் நகைச்சுவையும் மகிழ்ச்சியும் அங்கே பொங்கி வழியும். வீட்டுப் பாடங்களைப் பாதியில் வைத்து விட்டு, எங்கள் ‘அன்னம்' வீட்டின் நுழைவுவாயிலில் கம்பீரமாய் வீற்றிருக்கும் பாரதியை ரசித்துக்கொண்டே என் அப்பாவின் அறைக்குள் என் விழிகளைப் பதிய வைத்து அங்கே தவழ்ந்தோடுகின்ற பேச்சின் சாராம்சங்களைப் புரிந்து கொள்ள முடியாமல், அதே சமயத்தில், ஒரு தாயின் மொழிக்கு பதிலுரைக்க ஆசைப்படும் குழந்தையின் தத்தளிப்புக்களோடும் அவர்களின் நட்பின் சுவாரஸ்யம் கலந்த பேச்சுக்கள் எனக்குள் அகப்படாமல் சிரிப்புகளை உதிர்க்கக் கற்றுக் கொடுத்த அந்த ரசனை மிகுந்த நாள்கள் இன்னும் நிறைந்திருக்கின்றன என் கண்களுக்குள்.
      கவிஞர் சிற்பி அவர்களின் மேடைப் பேச்சுக்களில் நான் முதன்முதலாக அந்த பிரம்மாண்டமான கூட்டத்தில் அமர்ந்து கேட்டது பாரதி நூற்றாண்டு விழாவில். அதே போன்று குறள் விழா, அப்பாவுடன் நான் உடன் சென்ற விழாக்கள், கவியரங்கங்கள்... என் தந்தையாருக்காக கவிக்கோ நடத்திய ‘கவிக்கோ விருது விழா' போன்ற எனக்குக் காணக்கிடைத்த அரிய வாய்ப்புகள் எல்லாவற்றிலும் கவிஞர் சிற்பி அவர்களின் கம்பீரமான பேச்சு என் செவிப்பறைகளில் இன்பத் தமிழைப் பாய்ச்சியது மட்டுமல்லாமல், தாய்ப் பறவையின் சிறகோசை கேட்டதும் தலைநிமிரும் குஞ்சுப் பறவை போல, கவிஞர் அவர்களது ரசனை மிகுந்த பேச்சைக் கூர்ந்து கேட்ட நிமிடங்கள் எல்லாம் என்னை பிரம்மிப்பில் ஆழ்த்திய பொழுதுகளாகவே மாறிப்போனது.
     என் தந்தையார் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்து கவிஞர் சிற்பி அவர்கள் மிகவும் சிறப்பு செய்ததை அடிக்கடி என் தாயார் நினைவுகூறிக் கொண்டே இருப்பார்கள். அந்த நன்றியுணர்வு எப்பொழுதும் எங்கள் அனைவரது நெஞ்சிலும் புதையுண்டிருக்கிறது. படர்ந்து விரிந்த அவர்களது அன்பின் வாசலை எவராலும் தொட முடியாது என்பதை வெளிப்படுத்தும் விதமாக, என் தந்தையார் அவர்கள், கவிஞர் சிற்பி அவர்களின் ‘மெளன மயக்கங்கள்', ‘பாரதி கைதி எண் 253' போன்ற புத்தகங்களுக்கு அணிந்துரை எழுதியுள்ளார்.
      சமீபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்ற ‘கவிக்கோ விருது விழா'வில் கவிஞர் இரா. மீனாட்சிக்கும், கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கும் கவிக்கோ விருதுகள் வழங்கப்பட்டன. அவ்விழாவில் கவிஞர் சிற்பி அவர்களை நீண்ட இடைவெளிக்குப் பின்பு சந்தித்தேன். கவிஞர் அவர்களது சிறப்புரையில் மெய்மறந்தேன். கவிஞர் அவர்களை அருகில் சென்று சந்தித்தேன்.
      இதயத்தின் அடியாழம் வரை நிறைந்திருந்த என் இளமையில் பூத்த பாசத்தின் நினைவுகள் எல்லாம் கண்ணீரால் சூழ்ந்தன. என் தந்தையாரை சந்தித்தது போன்ற இன்பம் என் உள்ளத்தைச் சுற்றிலுமாய். கவிஞர் அவர்களும் அதே பழமை கலந்த நினைவுகளுடன் என்னிடம் மிகுந்த பாசத்துடன் அம்மாவின் நலனையும் என் நலனையும் விசாரித்தார். அந்த நெகிழ்வான தருணம் என்றும் எனைவிட்டு நீங்கா இன்பமழைதான்.
      நெய்வேலிக்கு வந்தவுடன் கவிஞர் அவர்களை சந்தித்ததைக் குறித்த நிகழ்வை என் அம்மாவிடன் தெரிவித்தபோது மிக்க மகிழ்ச்சியடைந்தார்கள். கவிஞர் அவர்களுக்கு கடிதம் எழுதி அனுப்பியிருந்தேன். பல அலுவல்களுக்கிடையில் எனக்கு பதில் கடிதம் அனுப்பி எங்கள் குடும்பத்தின் மீது உள்ள பாசத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள். அக்கடிதத்தை நான் பத்திரமாக- “பத்திரம்” ஆக பாதுகாத்து வைத்திருக்கிறேன்.
      தன்னடக்கமும் சீரிய பண்பும் உயர்ந்தோங்கிய ஒரு மாமனிதரை, ஒரு பெருங்கவிஞரை என் வாழ்நாளில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தமைக்கு என் தந்தையாரை நினைவு கூர்ந்து நன்றி கூற ஆசைப்படுகிறேன்.
 என் தந்தையார் இன்று இருந்திருந்தால் சிற்பி மாமாவுக்கு வாழ்த்துகளைப் பாமாலைகளால் தொடுத்திருப்பார். நானோ ஒரு இளம்பிறை.
      கவிஞர் சிற்பி அவர்களுக்கு
      பவள விழா போல
     நூற்றாண்டு விழாவும்
இனிதாக, சிறப்பாக நடைபெற எங்கள் குடும்பத்தார் அனைவரின் நல்வாழ்த்துகளையும் நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
                                                                                 -அன்புடன்,
                                                                                  செல்மா.
( ‘சிற்பி பவள விழா நிகழ்வுகள் - பதிவுகள் ' -  பக்கங்கள்  17,18ல் இடம் பெற்றது)

Saturday, November 19, 2011

மனங்கவர் முன்னுரைகள்...நிலாமகளின் வலைப்பூவில் இருந்து ...

 



            “தமிழ்க் கவிதையின்... தமிழ்க் கவிஞர்களின்... ஒரு குறிப்பிட்ட காலத்தின் ஒளிசூடிய அடையாளம் ‘மீரா'. கவிதைப் பெருக்கில் கடல் செய்யும் ஆற்றல் கைவரப் பெற்றும் குளமாய் தன்னைக் குறைத்துக் கொண்டவர்; இங்கிதமான காதல் தமிழிலும் அங்கதமான அரசியல் தமிழிலும் முன்னேர் நடத்திய முதல்வர்”- இது அறிவுமதி, ‘மீரா சிறப்பிதழாய்' வெளியிட்ட தன் ‘மண்' மூன்றாமிதழில்.
       
        “சிவகங்கை என்ற சிற்றூரை அவர் இலக்கிய வாதிகள் வந்து செல்லும் புண்ணியதலமாக்கினார். பிறர் படைப்புகளை வெளியிடும் வெறியில் அவருடைய எழுத்துக்கள் தடைபட்டுப் போயின.” என்றவர் மீராவின் கெழுதகை நண்பர் அப்துல்ரஹ்மான்.
       
         பழனிபாரதி சொன்னாற்போல், ‘அன்பின் விதைகளுக்குள்ளே குறுகுறுத்த உற்சாகத்தின் தட்பவெப்பமான மீரா, ஓராயிரம் பெயர்களை ஊட்டி வளர்த்த ஒற்றைப் பெயர்'.
       
        “எழுதுபவர்களின் சாலைகள் அனைத்தும் சிவகங்கை நோக்கியே சென்றன. இளைஞர்களை அவர் ஊக்கப்படுத்தும் விதமே அலாதியானது. பயணங்களில் அவருக்கிருந்த ஆர்வம் அதிசயமானது” இது செழியனின் அஞ்சலிச் சொற்கள்.
        
         “அவர் பரிவு மிக்க ஒரு பதிப்பாளர்; உயர்ந்த கவிஞர்; சிறந்த பண்பாளர் என்கிற தகுதிகளையெல்லாம் விட மேன்மையான இரண்டு உண்டு அவரிடம். ஒன்று... அவருடைய தேர்ந்த இரசனை; இரண்டு... அவரோடு நெருங்கியவர்களிடம் அவருக்கிருந்த பாசம். பலருடைய முகவரியை எழுதித் தமிழ்நாட்டுக்குக் கொடுத்தவர் மீரா. அது யாருக்குப் பொருந்துமோ இல்லையோ... எனக்குப் பொருந்தும்” -கந்தர்வனின் கண்ணியச் சொற்களிவை.
        
       “தன்னை விமர்சனம் செய்பவர்களைக் கூட, மன்னித்து ஏற்கும் மனநிலை மீராவின் தனிச் சொத்து. ‘மரணம் ஒரு கதிர் அரிவாள் அன்று. அதுவொரு புல்வெட்டும் கத்தி' என்றார் பிரெஞ்சு எழுத்தாளர் கில்லர்பெல்லாக். பயிர் முற்றிப் பால் பிடிக்கும் வரை கதிர் அரிவாளுக்குக் காத்திருக்கத் தெரியும். புல்வெட்டும் கத்திக்கு பூ எது; புல் எது என பேதம் பார்க்கத் தெரியாது. மரணம் புல்வெட்டும் கத்தி. அது மீராவை நம்மிடமிருந்து பிரித்து விட்டது” இப்படி உருகியவர் இந்திரன்.
       
       “அவரது அன்பையும் அரவணைப்பையும் நட்பையும் உரிச்சொற்களோ உவமைகளோ எடுத்துக் காட்டிவிட முடியாது. மீரா ஓர் அனுபவம். எளிமை நிறைந்த அவரது அன்பில் திளைத்தவர்கள் பாக்கியவான்கள். இப்படியொரு கலப்படமற்ற அன்பை, நிபந்தனையற்ற நட்பை இனி யாரிடம் பெறப்போகிறோம்...?!” என நெட்டுயிர்த்தவர் கலாப்ரியா.

         சி. மகேந்திரன் சொன்னது...“சாவு சிலரை மட்டும் சாகடிக்கக் கூடியது. மரணத்தை வெல்லும் வீரியம் கொண்டவர்களுமுண்டு. இவர்கள் நம்பிக்கை மிக்க நெம்பு கோல்கள். மீராவின் மரணம் துயரை வேதனையைத் தந்தாலும், எந்த நம்பிக்கை வறட்சியையும் உருவாக்கவில்லை. அவர் தனது இறுதி நாட்களில், ‘மீரா கவிதைகள்' நூலுக்கு எழுதிய முன்னுரையில்...

‘எனது கனவுகளைப் படித்து என்னைப் போல் எழுதும் புதுக் கவிஞர்களே! இதோ உங்களுக்காக என் ‘மீராவின் கவிதைகள்'. இதிலுள்ள காதல் கவிதைகளோடு நின்றுவிடாதீர்கள். சமூகம் சார்ந்த சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். தமிழினம் வீழ்ச்சியுற்றுக் கிடப்பதில் எனக்குச் சம்மதமில்லை.
எழுந்து நில்லுங்கள்; எழுச்சி கொள்ளுங்கள்; புரட்சி செய்யுங்கள்”
       
        எஸ். விஸ்வநாதன் சொல்வது போல், அவருக்கு கவிக்கோ விருது வழங்கும் விழாவில் வெளியிடப்பட்ட ‘மீரா கவிதைகள்', ‘கோடையும் வசந்தமும்' ‘குக்கூ' என்ற மூன்று நூல்களும் தான் அவரது கடைசி இலக்கியப் படைப்புகள் என அவர் தெளிவாக உணர்ந்திருந்தார் என்பதை அந்நூல்களுக்கு அவர் எழுதியிருந்த முன்னுரை, என்னுரை, நன்றியுரை போன்றவற்றைப் படிக்கும் போது யூகிக்க முடியும். தன் வாழ்வில் தான் நேசித்த, தன்னை நேசித்த, தான் வளர்த்தெடுத்த குழந்தைகள், தன்னை வளர்த்தெடுத்த உறவினர்கள், நண்பர்கள், சக ஆசிரியர்கள், தனது தமிழ் ஆசான்கள் எல்லோரையும் அநேகமாக ஒருவர் விடாமல் நன்றியுடன் குறிப்பிட்டுப் போற்றியுள்ளதையும், மூன்று நூல்களையும் தனக்கு தமிழ் கற்றுக் கொடுத்த மூன்று ஆசிரியர்களுக்கும், பள்ளித் தோழருக்கும், அன்புச் சகோதரர் மனோகரனுக்கும், காணிக்கையாக்கி இருப்பதையும் அவரது முன்னுரை, நன்றியுரையோடு சேர்த்துப் படித்தால், தனது மரண சாசனத்தைத் தான் இந்நூல்களில் பதிவு செய்திருக்கிறார் என்பது புலனாகும். (மீரா கவிதைகள் நூலில் முன்னுரையே 21 பக்கங்கள்!)

        “அறுபதுகளில் வந்த ஈழத்து மஹாகவியின் ‘குறும்பா'க்களில் மனம் பறிகொடுத்தவன் நான். ஆங்கிலத்திலுள்ள ‘லிமரிக்ஸ்' என்னும் கவிதை வடிவத்தை கச்சிதமாகப் பயன்படுத்தி தமிழுக்கு அழகு சேர்த்தவர் மஹாகவி. இது போல அடி, சீர் வரையறையின்றி என் பாணியில் எழுதத் தொடங்கினேன். இதிலுள்ள கவிதைகளை வாசகர்கள் ஓடுகிற ஓட்டத்தில் படித்து தூக்கியெறிந்து விடாமல் கொஞ்சம் நிதானமாகப் படிக்க வேண்டும்.
         சரஸ்வதி பூசைக்குப் போனால் பொரிகடலை கொடுப்பார்கள். அதில் கடலையை விடப் பொரிதான் அதிகமிருக்கும். இருந்தாலும் பொரியை எடுத்தெறியாமல் கடலையுடன் சேர்த்துச் சுவைப்பது போல எல்லாக் கவிதைகளையும் சுவைக்க வேண்டும்.
          ‘குக்கூ'வில் பின்பற்றப்பட்டுள்ள இயைபுத் தொடை பல இடங்களில் செயற்கையாகப் படுகிறது என்கிறார் கவிக்கோ. நியாயமான விமர்சனம்.
கலை(Art), செய்கலை (Craft) இரண்டுக்கும் இலக்கியத்தில் இடமுண்டு. சில கவிதைகள் முதல் வகையையும், பல கவிதைகள் இரண்டாம் வகையையும் சேர்ந்தவை. இப்படித்தான் நான் சமாதானம் சொல்ல முடியும். குழந்தைகளோடு குழந்தையாய் சில பொம்மைகளும் இருந்துவிட்டுப் போகட்டுமே!”
(குக்கூ முன்னுரையில் மீரா)

        “கழகத்தில் நானெழுதிய கவிதைகளுக்கும்(மீரா கவிதைகள்), இப்போது இதில் (கோடையும் வசந்தமும்) உள்ள கவிதைகளுக்கும் அதிக வித்தியாசமில்லை. இரண்டிலுமே என் முற்போக்கு, அதிமுற்போக்கு அரசியல் முகங்களே தென்படுகின்றன. நடையில் வீரியக் குறைவு. வார்த்தைகளில் கலப்பு மொழி, சில இடங்களில் செயற்கைத் தன்மை இத் தொகுப்பில் காணப்படுகிறது” (கோடையும் வசந்தமும் முன்னுரை-பக்.26)

        1971-ல் மீராவின் கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் வசன கவிதைக் காவியம் வெளிவந்தது.(நானெல்லாம் பிறந்த குழந்தை அப்போது!) கவிதை இலக்கியத்தில் மீரா அலை சுழன்று வீசியது. இந்நூலில் முன்னுரையாக ஒரு முடிவுரை எழுதியிருப்பார்... படித்தவர்கள் அத்தனை பேருக்கும் மறக்க முடியாத வரிகள் அவை.

“என் வேட்கையே...
நீ எனக்கு காதலைத் தந்தாய்; அது உழைப்பாளியின் வியர்வையைப் போல் உயர்வானது.
நான் உனக்கு இந்த வசன காவியத்தைத் தருகிறேன்; இது ஏழையின் கண்ணீரைப் போல உண்மையானதா என்று பார்.
என் சத்தியமே...
என்னை நீ புரிந்து கொள்ளவில்லையென்றால் வேறு யார் புரிந்து கொள்ளக் கூடும்?
வேறு யார் புரிந்து கொண்டுதான் என்ன?
என் அந்தரங்கமே...
இதோ, என் சொல்லோவியம்... விசுவாமித்திரனைப் போல் வேண்டாமென்று சொல்லிவிடாதே.”
நன்றி: http://www.nilaamagal.blogspot.com/   Thursday, 4 August 2011

Tuesday, April 26, 2011

காலங்களில் ‘அவர்' என் வசந்தம்

கவிஞர்.மீராவின் மனைவி இரா.சுசீலாவிடம் ஒரு நேர்காணல்...


     தமிழ்மொழி, பொதுவுடமை, சமுதாய சீர்திருத்தம், தொழிலாளர் முன்னேற்றம் இவற்றில் பாரதி, பாரதிதாசனையொத்த எழுச்சிக் கவிஞர் தமிழுலகில் ‘மீரா' என்றறியப்படும் மீ. ராசேந்திரன்! பாவேந்தர் பாரதிதாசன் ... என் குரு! மகாகவி பாரதி... என் தெய்வம்! என்று தன் ‘மீரா கவிதைகள்' நூல் முன்னுரையில் குறிப்பிடும் இவர், கவிஞர், கல்லூரி முதல்வர், தொழிற்சங்கவாதி; மொழிப்பற்றாளர்; பதிப்பாசிரியர்; வானம்பாடி இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர்! ‘கவி'என்கிற கவிதை இதழ், ‘அன்னம்', ‘அன்னம் விடு தூது'என்ற இதழ்களின் ஆசிரியர்; பல பதிப்புகள் கண்ட ‘கனவுகள்+ கற்பனைகள்=காகிதங்கள்' ,'மூன்றும் ஆறும்', ‘ஊசிகள்' போன்ற நூல்களின் படைப்பாளி; மனிதாபிமானம் மிக்க ஒரு பகுத்தறிவுவாதி... எனப் பல்வேறு ஆளுமைத் திறமைகளைக் கொண்டவர். சிவகங்கைக்காரர்.

     கவிக்கோ அப்துல் ரஹ்மான், டி.எம். அப்துல் காதர், கவிஞர்கள் சிற்பி, இன்குலாப், நா.காமராசன், மேத்தா, வைரமுத்து,பாலா, தமிழன்பன்,
 பி.சிதம்பரநாதன், முருகு சுந்தரம், அபி தேனரசன், புவியரசு, தமிழ்நாடன், தணிகைச் செல்வன், இந்திரன், காசி ஆனந்தன், நவகவி, கல்யாண்ஜி, கலாப்ரியா, கந்தர்வன், அறிவுமதி, வெ.சேஷாசலம், க.வை.பழனிச்சாமி, நாஞ்சில் ஆரிது, வைகை வாணன், இக்பால், பஞ்சு, ரவிசுப்ரமணியன், வசந்தகுமார்-இவர்கள் என் அங்கங்களைப் போன்ற சகோதரக் கவிஞர்கள். இவர்கள் என்னுள் நிறைந்திருக்கிறார்கள். எனவே, நான் நானல்ல; நான் மட்டுமல்ல. எல்லாரும் கலந்த ஒரு அவதாரம். ஆமாம்... நான் செத்தாலும் வாழ்வேன்!( மீரா கவிதைகள் நூல் முன்னுரையில் மீரா).

     மீரா பலரை உருவாக்கியவர்; அம்முயற்சியில் தன்னை ‘உரு'வாக்கிக் கொள்ள மறந்தவர். மீராவின் பாடல்களில் கவித்துவ ஒளிக்கீற்றுகள் பலப்பல உள்ளன. ஆனால், அவரோ மற்றவர்களின் ஒளிச்சேர்க்கையில், தனது நிறத்தை இணைத்துக் கொண்டவர். தன்னை இழக்கத் துணிந்தவர்.(அறிஞர். தமிழண்ணல்)

     உடல்நலக் குறைவால் தமது 63வது வயதிலேயே மரணம்(01.09.2002) தழுவிய அவருக்குக் கடந்த செப்டம்பரில் (23.09.2010) நெய்வேலியில் ஒரு நினைவுக் கூட்டம் நடந்தது.

     அதில் கலந்து கொண்ட மீராவின் துணைவியார் சுசீலா அம்மையாரிடமும், மகள் கண்மணி பாண்டியனிடமும் அவசரமாய் ஓரிரு வார்த்தைகள் பகிர வாய்ப்புக் கிடைத்தது.

     மறுநாள் மாலை, கண்மணி பாண்டியன் இல்லம் சென்று, ஆற அமர கவிஞர் பற்றிய நினைவுகளை, அவரது துணைவியாரிடம் பேச விழைந்தோம்.

     அம்மையாரின் எளிமையான தோற்றமும், மாறாத புன்னகையும் வசீகரித்தது எங்களை.

     கவிஞர் மீராவின் உன்னதங்களை, அவரது இலக்கிய நண்பர்கள் வாயிலாகவே வெகுவாக அறிகிறோம். பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, அ. நல்லக்கண்ணு போன்ற அரசியலாரின் புகழ் மொழிகளையும் குறிப்பிடலாம்.

      சாகாத வானம் நாம்/ வாழ்வைப் பாடும்/ சங்கீதப் பறவை நாம்/ பெருமை வற்றிப் போகாத/ நெடுங்கடல் நாம்/ நிமிர்ந்து நிற்கும்/ பொதியம் நாம்; இமையம் நாம்/ காலத்தீயில் வேகாத பொசுங்காத/ தத்துவம் நாம்... பேரறிஞர் அண்ணா போன்ற தலைவர்கள் அரசியல் தலைவர்கள் அடிக்கடி மேடையில் எடுத்தாண்ட மீராவின் கவிதையொன்றின் சில வரிகள் இவை.

     அவருடனான 38 ஆண்டுகால (10.09.1964)-(01.09.2002) வாழ்தலில் ஒரு துணைவியாக கவிஞரைப் பற்றிய அனுபவங்களை கேட்டறியும் ஆவலை வெளியிட்டோம்.

     தென்றலாக வருடும் மென்குரலில் துவங்குகிறார்...“எனக்கு கல்யாணம் செய்யும் போது 16-17வயசு. அபூர்வமான மனிதர் என் கணவர். சோர்வில்லாதவர். நகைச்சுவையாளர். யாரையும் கடிந்து பேசமாட்டார். எல்லாருக்கும் தன்னாலான நல்லதை செய்யப் பிரயாசைப்பட்டவர்.

     ருசித்து சாப்பிடுவார். அசைவ பிரியாணியும், மீன் குழம்பும் ரொம்ப இஷ்டம். காபி ரொம்பப் பிரியம். கேட்கறப்போவெல்லாம் தரணும். ஆசிரியர் போராட்டத்துல கலந்துகிட்டப்ப சிறைக்குப் போய் வந்த பெறகு, ‘அங்க சாப்பாடெல்லாம் எப்படி'ன்னு கேட்டதுக்கு, ‘பிரமாதம், வீட்டைவிடக் காபி நல்லாவேயிருந்துச்சு'ன்னார். (சிரிப்பு)

     கடைசியா உடம்பு முடியாமப் போனபோது கூட, ‘பத்தியமாச் சாப்பிட்டு 100 வயசு வாழறதை விட, விருப்பமானதைச் சாப்பிட்டு எந்த வயசிலயும் போகலாம்' அப்படீம்பார்.

     இராத்திரி படுக்க ரெண்டு மணியானாலும் விடியக்காலையில 4-5 மணிக்குள்ள எழுந்திடுவார். பேராசிரியர் வேலையிலயிருந்து ஓய்வு பெற்ற பெறகும் கூட, பதிப்பிக்கிற நூல்களுக்கு அச்சுப் பிழை சரி செய்யறது, பேப்பர், இங்க் மத்த பொருட்கள் வாங்கிட்டு வரது, படிக்கிறது, எழுதுறது, தேடி வர்ற நண்பர்கள் கிட்ட பேசறதுன்னு நாள் பூரா ஏதாவது செய்துகிட்டேயிருப்பார்.

     தினம் தினம் பயணத்துக்கும், புத்தகக் கட்டுகளை சுமந்து எவ்வளவு தூரமும் நடக்கவும் அசராதவர். வெளியே போனா கடைசி வண்டியாவது பிடிச்சு ஊருக்கு வந்து வீட்டில் படுத்தாத் தான் அவருக்கு நிம்மதியாயிருக்கும்.

     இப்பவும் ஊருக்குப் போயிருக்கார்... வந்துடுவார்ன்னு தான் நெனைச்சு நெனைச்சு, ஒரேயடியாப் போயிட்ட துக்கத்தைக் கரைச்சுக்கறேன். சிவகங்கையில எங்க வீட்டுல 30 வருஷமா ஒரு அம்மா வேலை பாத்துச்சு. இப்பவும் நான் ஊருக்குப் போனா அப்படித்தான் சொல்லும்... “ஐயா ஊருக்குப் போயிருக்கார்ம்மா... வந்துடுவார், கவலைப் படாம இருங்க.”

     கவிக்கோ விருது வாங்க சென்னை போன போது, என் தம்பி கார்த்திகேயன் வீட்டில் திருவான்மியூரில் ஒரு மாசமிருந்தோம். தினமும் சாயங்காலமானா அப்துல் ரஹ்மான், மேத்தா, இந்தியா டுடேயிலிருந்த விஸ்வநாதன் எல்லாரும் இவரைப் பார்க்க வந்துடுவாங்க. என் தம்பி, இவர், அவங்க மூணு பேர் எல்லாருமா பீச்சுக்கு வாக்கிங் போயிட்டு 8.30 மணிக்கு மேல வீடு திரும்புவாங்க. அந்த ஒரு மாசமும் என்னோடவே அதிக நேரமிருந்தார். ரொம்ப சந்தோஷமாயிருந்தேன் அப்ப.

     இவ்வளவு வேலை செய்தவரை, இவ்வளவு பேரோடு பேசியவரை நம்மோட ஒரு மணி நேரமாவது பேச வைக்க முடியாமப் போனோமேங்கற ஏக்கம் எப்பவுமிருந்துச்சு. அதுவும், ஜெயலலிதா கண்ணகி சிலையை பீச்சுல இருந்து அப்புறப்படுத்தினப்போ தீர்ந்துச்சு. ‘அப்படியென்ன அந்த சிலை மேல பயப்படும் படி'ன்னு கேட்டேன் அவரை. அதிசயமா, ஒரு மணி நேரத்துல சிலப்பதிகாரம் காப்பியம் முழுக்க எனக்குப் புரியுற விதமா பாடம் மாதிரி சொன்னாரு. அந்த ஒரு மணி நேரப் பேச்சு இப்பவும் நினைவிருக்கு எனக்கு. மறக்கவே முடியாது.

     இப்ப, அவர் இல்லாத ஒரு குறைதான்... எது இருந்தும் அவர் இல்லாதது பெரும் குறைதான் எனக்கு.”

     காலமாகிப் போன தன் வசந்தகால நினைவுகளின் அழுத்தம் அவரின் குயில் குரலை இறுகப் பிடித்து கமறச் செய்கிறது.

     “உங்க அண்ணிய ரொம்ப காலமாவே நான் புரிஞ்சுகிடாமயே இருந்துட்டேன் ரவி” எனக் கும்பகோணத்தில் வைத்துக் கடைசியாகப் பார்த்த போது மீரா தன்னிடம் வருந்தியதாக ரவி சுப்ரமணியம் தன் இரங்கல் கட்டுரையில் (மீரா சிறப்பிதழ்-மண்/3, பக்கம் 47) குறிப்பிட்டிருப்பார். மீராவின் நண்பர்கள் அனைவரும் அவரது துணைவியாரை அண்ணி என்று தான் அழைப்பர்.

     அதைப் படித்த போது மீராவின் ஆதர்சக் கவிஞர் கலீல் கிப்ரானின் ‘பிரியும் வேளை வரும் வரை தன் அடியாழத்தை அன்பு அறிவதில்லை' என்ற வரிகள் நினைவை நனைத்தன.

     முகில்களிடையே இருக்கும் வானவில்லாய் பிரபல மனிதர்களின் ஜொலிப்பு. அவர்களுக்கு வாழ்க்கைப் பட்ட மகராசிகளோ தத்தம் ஆசைகள், கனவுகள், தேவைகள், ஏக்கங்களைக் கனியறியும் ஆவலில் தம் பூவிதழ்களை உதிர்த்துக் காத்திருக்கும் பழமரங்கள் போலாகின்றனர்.

     கணவர் பாதி குழந்தைகள் பாதி கலந்து செய்யப்பட்ட இவர்களது தினசரிப் பொழுதுகளூடே கொண்டாட யாருமற்றுப் பரண்மேலேற்றிய பழங்குப்பையாய் இவர்களுக்குள் ஒளிந்திருக்கும் உள்ளக் குமைச்சல்களை தமக்குள்ளேயே புதைத்துக்கொண்டு நீர்த்துப் போகச் செய்கின்றனர்.

     சகிப்புத் தன்மையும் விட்டுக் கொடுத்தலும், அர்ப்பணிப்பு உணர்வும் வெற்றிகரமான இல்வாழ்வுக்கு அத்தியாவசியமாகிறது. சாதனை மனிதர்களின் துணையாகிறவர்களுக்கு இவற்றின் சதவீதம் சற்றுத் தூக்கலாகவே இருந்தால்தான் இணைநலம் இனிதாகிறது.

     “யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம்... ஆனால் கவிஞரின் மனைவியாக வாழ்வது கஷ்டம்” என்ற செல்லம்மா பாரதியின் வானொலியுரை (1951, திருச்சி வானொலி நிலையம்) வரும் தலைமுறைகளிலாவது மாறி ஒலிக்கட்டும்... ஒலிக்க வேண்டுமென்ற பிரார்த்தனையோடு விடைபெற்றோம்.

நவம்பர் 2010  'கிழக்கு வாசல் உதயம்' இதழில் வெளியானது. 
 
நேர்காணல்: நிலாமகள், http://www.nilaamagal.blogspot.com/

கவிஞர்களின் கவிஞர் ‘மீரா'

     வசனகவிதை தந்த பாரதிக்குப் பின்னர் புதுக் கவிதையின் தந்தையாய்த் திகழ்ந்த ந. பிச்சமூர்த்திக்குப் பிறகு கவிதையின் காலம் முடிந்தேவிட்டது என்று ஆரூடம் கணித்தவர்களின் வாக்குப் பொய்க்க, நவகவிகளுக்கு நிலைபேறு மிக்க வாழ்வு கொடுத்த கவிஞர்களின் கவிஞர் மீரா திராவிடச் சிந்தனையில் அரும்பிப் பொதுவுடமைத் தத்துவத்தில் பூத்துக் குலுங்கிய கவிதை நந்தவனம். 10.10.1938-ல் தோன்றி 01.09.2002-ல் மறைந்த சிவகங்கைச் சீமையின் கவிதைக் குயில்.

     "பிறந்தது தான் பிறந்தேன் நான் பெண்ணாய்ப் பிறந்தேனா" என்று கவிதை பாடிய கவிஞர் மீ. ராசேந்திரனின் முதல் இரு எழுத்துக்களின் இணைப்பிலிருந்து தான் கவிஞர் மீரா என்னும் பெயர் பிறப்பு. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள்

     "இலக்குமி அம்மாவும், எஸ். மீனாட்சிசுந்தரமும் என் மாதா பிதாக்கள். புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் என் குரு. மகாகவி பாரதி என் தெய்வம். என் குருவின் மூலமே என் தெய்வத்தை தரிசித்தேன். பாரதிதாசனின் தாசன் ஆன நான், மற்றும் ஒரு பாரதிதாசனானேன்" என்று குறிப்பிடும் மீரா, எழுத்துக்கும் வாழ்வுக்கும் இடையில் எந்தத் தடையுமின்றி குறிக்கோளுடன் வாழ்ந்து சிறந்தவர். அண்ணா, பாரதிதாசன், கண்ணதாசன், மு.வ. ஆகியோர் எழுத்துக்களில் ஏற்பட்ட ஈர்ப்பால் எழுத வந்த மீரா தொடக்கத்தில் மரபுக் கவிதைகள் எழுதியவர்.

     சாகாத வானம் நாம்; வாழ்வைப் பாடும்
     சங்கீதப் பறவை நாம்; பெருமை வற்றிப்
     போகாத நெடுங்கடல் நாம்; நிமிர்ந்து நிற்கும்
     பொதியம் நாம்; இமயம் நாம்; காலத்தீயில்
     வேகாத பொசுங்காத தத்துவம் நாம்;
     வெங்கதிர்நாம்; திங்கள் நாம்; அறிவை மாய்க்கும்
     ஆகாத பழமையினை அகற்றிப் பாயும்
     அழியாத காவிரிநாம்; கங்கையும் நாம்;

என்ற மீராவின் இப்பாடல், அக்காலத்தில் திராவிட இயக்க மேடைகளில் பாரதிதாசன் பாடல்களுக்கு அடுத்ததாக ஒலித்த பாடல் இது என்பார் அப்துல் ரகுமான்.

     தெய்வங்கள் திருநாட்கள் எங்கட்கில்லை
     தெருவோரச் சாக்கடைக்கு வருமா தெப்பம்?

என்ற மீராவின் கவிதை அண்ணாவை ஈர்த்த கவிதை. அவர் அரங்குகளில் எடுத்து முழங்கிய கவிதை. மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் பயின்ற கவிஞர் மீரா, சிவகங்கை மன்னர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியேற்றார். அக்காலத்தில் மதுரைப் பல்கலைக் கழகக் கல்லூரி ஆசிரியர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்குத் தொடங்கப்பட்ட மூட்டா (MUTA) இயக்கத்தில் தீவிரப் பங்காற்றினார். அவ்வமைப்பின் ஜர்னல் ஆசிரியரானார். போராட்டத் தீவிரத்தால், கல்லூரியினரால் இருமுறை பணி நீக்கம் செய்யப் பட்டார். அதுசமயம் உருவானதே அன்னம் பதிப்பகம். அகரம் அச்சகத்தின் வழி, நவீன படைப்பிலக்கியங்களை உருவாக்கித் தமிழுலகுக்குத் தந்தார். அபியின் ‘மெளனத்தின் நாவுகள்' என்ற தொகுப்பை அடுத்து, நீலமணி, கல்யாண்ஜி, இரா. மீனாட்சி உள்ளிட்டோர் கவிதைகளை, நவகவி என வரிசைகளாக்கி வழங்கினார். கி.ரா.வின் படைப்புகளை வெளியிட்டுப் பெருங்கவனிப்பை ஏற்படுத்தியது அன்னம். பின்னர்,'அன்னம் விடு தூது', ‘கவி' என்ற கவிதைக்கான சிற்றேடு ஆகியவற்றையும் அன்னம் வாயிலாக வெளியிட்டார் மீரா.

     மொழிபெயர்ப்பு, இலக்கிய விமர்சனம், படைப்பிலக்கியம் என தமிழின் துறைதோறும் பதிப்பாக்கங்களை வலுப்படுத்தித் தேர்ந்த பதிப்பகராகத் தம்மை நிலைநிறுத்திக் கொண்டார். தரமான இலக்கியக் கூட்டங்களை ஏற்பாடு செய்து இனிது நடத்தினார். அவற்றுள் மிகவும் குறிப்பிடத் தக்கது சிவகங்கையில் அவர் மூன்று நாள்கள் நடத்திய ‘பாரதி நூற்றாண்டு விழா'.

பதிப்பகத் துறையில் எழுத்துப் பரம்பரையை உருவாக்கி வளர்த்த அவர், தம் கல்லூரிப் பணியிலும் சிறப்பான மாணவர்களை உருவாக்கினார். எந்தக் கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்துத் தெருவில் இறங்கிப் போராடினாரோ, அந்தக் கல்லூரியிலேயே பின்னர் தமிழ்த்துறைத் தலைமைப் பொறுப்பையும், பொறுப்பு முதல்வர் பணியையும் அவர் ஆற்ற நேர்ந்தது. அதுசமயம் கல்லூரி நிர்வாகத்தச் சீர்செய்து மாணவர்களிடையே ஒழுக்கக் கட்டுப்பாடுகளை வலியுறுத்திய அவர், அவ்வூரின் பெரிய மனிதர் ஒருவரது பிள்ளையின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததன் விளைவாக, கும்பகோணம் அரசுக் கல்லூரிக்குப் பணிமாற்றம் செய்யப்பட்டார்.

     "கல்லூரிப் பணி, தமிழ்த்துறைத் தலைமைப்பணி, முதல்வர் பொறுப்புப் பணி, கல்லூரிப் போராட்டப் பணி, கல்லூரி ஆசிரியர்கள் தொழிற்சங்கப் பணி, கவி இதழ்ப்பணி, அன்னம் விடு தூது இதழ்ப் பணி, அன்னம் பதிப்பகச் சிறப்பாசிரியர் பணி, அகரம் அச்சு மேற்பார்வைப் பணி, கொஞ்சம் குடும்பப் பணி இவை எல்லாம் சேர்ந்து என் எழுத்துப் பணியை வளைத்துப் பிடித்துக் கட்டிப் போட்டுவிட்டன" என்று தாம் பணிகளால் பிணிக்கப்பட்டு கவிப் பறவையானதைக் குறிப்பிடும் மீரா, அவற்றையும் மீறித் தமிழுக்குச் சிறப்பான ஆக்கங்களை அளித்துள்ளார்.

     ‘கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்' அக்காலத்தில் கல்லூரிக் காதலர்களின் வேதப் புத்தகமாகத் திகழ்ந்தது. இவர்தம் இலக்கிய, லட்சியக் கவிதைகளின் ஆவணமாகத் திகழ்ந்த ‘மூன்றும் ஆறும்' கவியரங்கக் கவிதைத் தொகுப்பு, ஊழல் அரசியலையும் நாணயமற்ற வாழ்வின் போக்குகளையும் அங்கதமாகக் குத்திக் காட்டும் கவிதைக்கூர் முனைகள் 
‘ஊசிகள்'.
     ஹைகூவும் சென்ரியூவும் தமிழுலகில் இறக்குமதியான காலத்தில் தமிழ் மரபில் இவரிடமிருந்து ஒலித்தது குக்கூ.

     அழுக்கைத் தின்னும்
     மீனைத் தின்னும்
     கொக்கைத் தின்னும்
     மனிதனைத் தின்னும்
     பசி!
என்பது அவர்தம் குக்கூக் கவிதைகளுள் ஒன்று. இராசேந்திரன் கவிதைகள், மீராவின் கவிதைதள், கோடையும் வசந்தமும் ஆகியன இவர்தம் பிற கவிதைத் தொகுப்புகள். ‘எதிர்காலத் தமிழ்க்கவிதை' கவிதை விமர்சன நூல். ‘வா இந்தப்பக்கம்' நிகழ்காலச் சமுதாய நிகழ்வுகளை அங்கதமாக விமர்சிக்கும் கட்டுரைத் தொகுப்பு.

     எளிமையும் அன்பும் தோழமையும் நிறைந்த புன்சிரிப்புக் கவிஞர் மீரா, எழுத்திலும் பேச்சிலும் பொங்கிப் பெருகும் அங்கதம் இவர்தம் உயிர்த் துடிப்பு. நிறைவுக் காலத்தில் ‘ஓம்சக்தி' இதழின் ஆசிரியராகவும், சிறிது காலம் கோவையில் தங்கிப் பணியாற்றிய மீரா, எஸ்.ஆர்.கே. யைப் போல் பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டார்.

     "பாரியின் பறம்பை மூவேந்தர்கள் முற்றுகையிட்டது போல் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீரிழிவு, இதய நோய், வாத நோய் ஆகிய முந்நோய்களால் தாக்கப் பட்டுப் படுக்கையில் கிடக்கிறேன். இப்போதாவது கடவுளைக் கும்பிடுங்கள், கோயிலுக்குப் போங்கள்... என்று நெய்வேலியிலிருந்து வரும்போதெல்லாம் என் அருமை மகள் செல்மா சொல்லிப் பார்த்தும் எதுவும் நடக்கவில்லை. என்னால் முடியவில்லை. கடவுள் இருந்து காப்பாற்றினால் நல்லதுதான்.(நான் பிழைத்துப் போகிறேன்) ஆனால், இயல்பாய் எனக்கு அந்த நம்பிக்கை வரவில்லை. இனி சாகப் போகும்போதா வரப்போகிறது? திராவிடர் கழகத் தலைவர் திரு.கி.வீரமணி கொடுத்த பெரியார் விருது என் படுக்கை அருகே இருக்கிறது" என்று அக்காலகட்டத்திலும் அங்கதத்தோடு தன் நிலையை எழுதினார் மீரா.

     அப்துல் ரகுமான் வழங்கிய கவிக்கோ விருதும், கவிஞர் சிற்பி அறக்கட்டளை வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருதும் இவருக்குப் பெருமை சேர்த்தன. இவர்தம் பதிப்பாக்கங்களால் மிகச்சிறந்த விருதுகள் பெற்ற படைப்பாளிகளை உருவாக்கிய படைப்பாளி கவிஞர் மீரா.

‘தனியாய்... தன்னந்தனியாய்... தன்னந் தனியனாய்...' இது மீரா எழுத நினைத்திருந்த நாவலின் தலைப்பு. நிறைவேறாது விடப்பட்ட இந்நாவலைப் போலவே இவர்தம் கனவாகிய, மாமல்லபுரச் சாலையில் கவிஞர்களுக்காக, பாரதி கவிதா மண்டலம் அமைக்க வேண்டும் என்ற ஆவலும்... கவிக்கனவு பலிக்கக் காலம் துணை செய்யட்டும்!

                                                                                       -கிருங்கை சேதுபதி


(24.04.2011 தினமணி செய்தித்தாளின் ‘தமிழ்மணி' பகுதியில் வெளிவந்தது)

Thursday, December 9, 2010

குக்கூ கவிதைகள்

********************************************************
குக்கூ கவிதைகள் - கவிஞர் மீரா
********************************************************
கருப்பண்ணசாமி கோயிலில்
வெட்டப் பட்ட
ஆடுகளைப் பார்த்துக்
கால்கள் சேர்த்துக்
கட்டப்பட்ட கோழிகள்
தொண்டைக் குழிக்குள்
தொடர்கதை எழுதும்...
0
கோழியும் சேவலும்
குப்பையைக் கிளறும்
விடியற்காலையில்
கண்மூடிக் கிடக்கும்
ஊர்நாய் ஒரு மூலையில்
இரவெல்லாம் குரைத்த அசதியில்...
0
இதுதான் வேலை
மல்லாந்து படுத்து
சிகரெட் புகையை
ஊதி ஊதித் தள்ளும்
எங்கள் ஊருக்கு வந்த
புதிய சிமெண்ட் ஆலை...
0
கும்பிட்டுப் போனான்
குமரன் தீமூட்டி;
மல்லிசேரி பீடியை
எடுத்துப் பற்ற வைத்தான்
மயானத் தோட்டி
எரியும் அப்பா பிணத்தில்...
0
சிறகிருந்தாலும்
செம்மறி முதுகில்
அமர்ந்து செல்லும்
சுகமே சுகமெனச்
சொல்லாமல் சொல்லும்
கரிச்சான் குருவி...
0
குழாயிலிருந்து
விழுந்தது தண்ணீர் கனமாய்
சுற்று முற்றும்
பார்த்து விட்டுத்
தொட்டியில் விழுந்தேன்
அம்மணமாய் ...
*********************************

Saturday, September 25, 2010

காகிதங்கள் + கனவுகள் = மீரா

<>

-நெப்போலியன்

மீ.ராசேந்திரன் எனும் மீரா நம்மை விட்டுப் பிரிந்து எட்டு  வருடங்கள் (1-09-2002) ஓடிவிட்டன. ஆனால், மீரா என்ற பீனிக்ஸ் தமிழ் இருக்கும்வரை உயிர்த்தெழுதலுடன் இலக்கியவானில் சிறகசைத்துக் கொண்டுதான் இருக்கும். அர்ப்பணிப்பான வாழ்க்கையை இறுதிவரை இயக்கி முடிக்கும் இயல்புகொண்டோரை காலம் அவ்வளவு எளிதில் உதிர்த்து விடுவதில்லை மீரா என்ற இலக்கியவாதியை, பதிப்பகத்தானை, நேசமிகு மாமனிதனை தமிழ் இலக்கியவரலாறு தன் கருப்பையின் கருவாய் சுமந்தபடியே இருக்கும். சிவகங்கை அன்னம் அகரம் என்ற சாகாத வானத்தில் மீரா எனும் வெள்ளி மீன் சிமிட்டிக்கொண்டுதான் இருக்கும். மீரா ஒரு அர்ப்பணிப்பு ஆத்மா... 'நவீன இலக்கியத்தின்பால் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் தமிழுலகில் உருவான ஈர்ப்புக்கு மீரா தொடங்கிய அன்னம் பதிப்பகத்தின் செயல்பாடு மிக முக்கியமான காரணம். வலிமையான இலக்கியச் சூழலை உருவாக்குவதில் ஒரு பதிப்பகத்துக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. கவிதைகளிலேயே இயங்கி வந்த மீராவும் ஏதோ ஒரு கட்டத்தில் இப்படி நினைத்ததால்தான் தன் இயங்கு தளத்தை மாற்றிக் கொண்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. ' ---- பாவண்ணன் மீரா ஒரு பொதுநலப்பூங்கா... '1959 முதல் துவங்கி 1965 - 1966 ம் ஆண்டுகளில் உள்ள அவரது கவிதைகளின் நோக்கமும் , தாக்கமும் மிக மிக அதிகம். மீராவின் கவிதைகள் முதன் முதலில் 1965ல் வெளியானது பிறகு அவரின் அடுத்த பதிப்பு 2002ல்தான் வெளியானது. இந்த 37 ஆண்டுகால இடைவெளிக்கு என்ன காரணம் ? ' ---- மு.மாரிமுத்து மீரா ஒரு சிந்தனைச்சிவப்பு... 'திராவிட இயக்கத்தில் வளர்ந்து மலர்ந்தவர் மீரா. அண்ணாவாலும்,கலைஞராலும் பாராட்டப் பெற்றவர் அவர். 70-களில் படிப்படியாக இடதுசாரித் திசையில் நகர்ந்து உறுதியான இடதுசாரிப் படைப்பாளியாகவும், சிந்தனையாளராகவும் விளைந்தார். ' -- பொன்னீலன் மீரா ஒரு புதுமரபி... 'தமிழ் இலக்கியத்தில் மரபுக்கவிதை சவலை நோயால் பீடிக்கப்பட்டு கவலைக்கிடமாகி நலிவுறும் நிலைக்கு வந்தபோதுதான், கவிஞர் மீரா புதுக்கவிதை என்னும் சிவப்பு அணுக்களை அதன் ரத்தத்தில் பாய்ச்சினார். ' ---- கவிஞர் பவேரா மீரா ஒரு பதிப்பகத்தேனீ... 'மீரா ஒரு கவிஞர் மட்டுமல்ல வணிக நோக்கம் இல்லாத பதிப்பக உரிமையாளர். ஜீவநேசமும் தோழமையும் குடிகொண்ட மாமனிதர். சிறந்த சிந்தனையாளர். கல்லூரி முதல்வர். ' --- தேனிசீருடையான் மீரா ஒரு அங்கதப்பூ... 'அவரைக் கடைசி முறையாகப் பார்த்தது ஒரு குதூகலமான சூழ்நிலையில். ஒரு விநாயக சதுர்த்தி நாளன்று கவிக்கோவுடன் என் வீட்டிற்கு வந்திருந்தார். கொழுக்கட்டைகள் தந்து உபசரித்தார் என் மனைவி. உங்க வீட்டிற்கு வரும்போது கொழுக்கட்டை கிடைக்கலாம் என்று நினைத்துக்கொண்டுதான் வந்தேன் என்றார் கவிக்கோ. அவருக்கு டயாபடாஸ் கேட்டாலும் கொடுக்க வேண்டாம் என்று சொல்லத்தான் நானும் கூட வந்தேன் என்றார் மீரா. அறை முழுக்கச் சிரிப்பு. அதை நினைத்தால் இப்போது மனம் கனத்துப் போகிறது. '--- மாலன் மீரா ஒரு கிரியாவூக்கி... 'நான் பதிப்பாளன் ஆனதற்கு ஒருவகையில் மீராதான் காரணம் என்று சொல்ல வேண்டும் ' -- காவ்யா சண்முகசுந்தரம் மீரா ஒரு வினைத்தொகை... 'அவர் கவிதையை வாழ்க்கையாகவும், வாழ்க்கையை கவிதையாகவும் ஆக்கியவர். சிவகங்கையில் மீராவுக்கு ஒரு நினைவு நூலகம் அமைக்க வேண்டும் என்பது என் ஆசை. நல்லவர்கள் அதை நிறைவேற்றித் தருவார்கள் என்று நம்புகின்றேன் ' --- கவிக்கோ.அப்துல் ரகுமான் மீரா ஒரு குருபீடம்... 'கவிஞர் மீராவின் மாணவர்கள் மற்றும் சீடர்களைப் பற்றிக் குறிப்பிடுவது அவசியம். முனைவர் ம.பெ.சீனிவாசன் (சிவகங்கை), முனைவர் இரா.பாலச்சந்திரன்(ஆங்கிலப்பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்), பேராசிரியர் சாகுல் அமீது(புதுக்கல்லூரி சென்னை), முனைவர் கே.ஏ.குணசேகரன்(பாண்டிச்சேரி) ஆகியோர். அவருக்கு சீடர்கள் பலர். அவர்களில் முனைவர் சுபாசு சந்திரபோசு(திருச்சி), முனைவர் மு.பழனி இராகுலதாசன்(தேவகோட்டை) முக்கியமானவர்கள். ஓய்வுபெற்ற ஆசிரியரும் அவருடைய உறவினருமான முகவை சோ.சண்முகம் மீரா நடத்திய இலக்கிய விழாக்களில் ஒத்துழைத்தார். அவரின் மாணவர் ரா.பாஸ்கரன். மீராவின் இறுதிக்காலத்தில் அவருடன் நெருங்கிப் பழகிய இரண்டு இளைஞர்கள் குறும்படத்தயாரிப்பாளரும் எழுத்தாளருமான செழியன், அடுத்தவர் சந்திரகுமார். ' ---- நா.தர்மராஜன் மீரா ஒரு சமர்க்களச்சிங்கம்... வார்த்தை வசீகரங்களுக்காக எந்தக் கொள்கையையும் எழுதியவர் அல்ல மீரா. பிள்ளைகளுக்கு கலப்பு திருமணம் செய்து வைத்தார். சொந்தமென்று ஏற்றுக்கொண்ட கோட்பாடு காரணமாகச் சொந்தச் சாதி ஆதிக்கக்காரர்களோடு சமரசம் செய்துகொள்ளாமல் சமர்க்களத்தில் இறங்கிய வரலாறு அவருக்கு உண்டு. பணிபுரிந்த கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக சாதி அபிமானங்களைத் தூரத்தள்ளியவர் இந்த இலட்சியக்கவிஞர். '---- கவிஞர் சிற்பி மீரா ஒரு கற்பகதரு... 'மீரா ஓராயிரம் பெயர்களை ஊட்டி வளர்த்த ஒற்றைப்பெயர் . எப்படிப் போட்டாலும் பூ விழும் நாணயம். ' ---- பழநிபாரதி மீரா ஒரு காரணி... 'மீராவின் படைப்புகள் மிகப் பொருத்தமான தேவையான நூல்கள். சமுதாயத்தை விழிப்படையச் செய்யக்கூடிய நூல்கள். மனித சமுதாயத்திற்கு ஏற்புடைய நூல்கள். '---- கலைஞர் மு.கருணாநிதி மீரா ஒரு புதுக்குறிஞ்சி... 'அவர் ஒரு குறிஞ்சிப்பூ. போதிய அளவு கண்டு போற்றப்படாத கவிஞர் அவர். திராவிட இயக்கக் கவிஞர்களுக்கு நேர்ந்த கதிதான் அவருக்கும் நேர்ந்தது. துதி பாடத் தெரியாதவர்கள் அங்கே தலை நிமிர்தல் இயலாது. மீரா எனும் பாவலன் தனித்திறன் உடையவன். மரபுப்பாடல்களில் பல சித்து விளையாட்டுக்கள் கண்டவன். அவனது உரை வீச்சுக்கள் ஒப்பற்றவை. உள்ளடக்கமும் புதுமையுடையது. வடிவ யாப்பும் புதிய பரிணாமம் காட்டுவது ' ---- அறிஞர் தமிழண்ணல் மீரா ஒரு காகிதச்சிற்பி... 'மீராவின் காகிதங்கள் கல்வெட்டுக்களாய் காலத்தை வென்று வாழக்கூடியவை. அக்காகிதங்களில் அவர் தமிழ் இலக்கியமாக நிலைத்து நின்று நீடித்து வாழ்வார். '---- இரா.சுப்பராயலு மீரா ஒரு விழிப்புணர்வுவாக்கியம்... 'தமிழக மக்களிடையே புத்தகப் புத்தாடைகளை வாங்கும் பழக்கத்தை ஊக்குவிக்க பிற பதிப்பாளர்களையெல்லாம் ஒன்று கூட்டிப் புத்தகக் கண்காட்சி நடத்தும் திருவிழாவிலும் மீரா ஒரு அறங்காவலர் போல விளங்கினார் ' ---- சு.குழந்தைநாதன் மீரா ஒரு தேமா... 'மீரா இந்த தேமாச் சீருக்குரிய ஈரசைப் பெயர், பெற்ற புகழ் இணையற்றது. மீரா இந்தப் பெயரை நினைக்கும்போது பெண்மைக்கேயுரிய நல்லியல்புகள் யாவும் நம் முன் தோன்றும். ராசேந்திரன் இந்த இயற்பெயரை எண்ணும்போது ஒரு பெரு வீரனுக்கே உரிய வீறும் வினைத்திறமும் விளங்கித் தோன்றும். அவரது கவிதைகளில் இவ்விரு இயல்புகளையும் கண்டு மகிழலாம். '---- ம.பெ.சீனிவாசன் மீரா ஒரு போராளி... 'அறிஞர் அண்ணா மீராவின் கவிதைகளைப் படித்ததோடு, கவனித்தும் வந்த காரணத்தால் அண்ணாவின் கடைசி மடலில் திராவிட இயக்கக் கவிஞர்களில் மீ.ராசேந்திரன் ஒருவர் என்று குறிப்பிட்டுள்ளார். அண்ணா தன் இயக்க மாநாட்டுக்குத் தொண்டர்களை அழைத்து எழுதிய கடிதத்தில் 'சாவா சந்திப்போம், வாழ்க்கை நமக்கென பூவா புறப்படுவோம், புல்லியரைத்தூள் செய்வோம் ' எனும் போர்க்குணம் மிக்க மீராவின் கவிதையை மேற்கோள் காட்டியுள்ளார் ' ---- சுபாசு சந்திரபோசு மீரா ஒரு மையம்... 'அறுபதுகளின் பிற்பகுதியில்... சென்னை வந்தால் திருவல்லிக்கேணியிலிருந்து கோட்டை,அங்கிருந்து பிராட்வே,அப்படியே மூர் அங்காடிப் பழைய புத்தகக்கடை, மீண்டும் திருவல்லிக்கேணி,பழைய புத்தகக்கடை வரிசை என்று ஒரு நிதானமான சூறாவளியாய்... ஏதாவது கேட்டுத் துளைத்துக் கொண்டே வரும் தம்பிமார்கள் கொண்ட ஒரு சின்ன மேகக்கொத்தைத் தள்ளிக்கொண்டு நடந்தே திரிந்து வந்த அந்தக் கால்கள் மிகுதியும் வாங்குவது புத்தகங்கள்தாம். அந்தச் சுமையைப் பறித்தாலும் தர மறுத்துத் தாமே சுமந்து வரும் அந்த உறுதியான கைகள்... மறுபடியும் மாலையில் மரீனா மணலில் வளையும் பெரியசாமி தோளில் கைபோட்டு உந்தியபடி இலக்கியம் பேசிக்கொண்டு முந்தி எட்டுவைத்துப் போகும் இவரைப் பார்த்தபடி பொன்னம்பலம் கேட்பான். 'அன்ணனுக்குக் கால் வலிக்கவே செய்யாதா ? ' 'ஒரு சொல்லைக்கூட இழந்துவிடக்கூடாது ' என்று ம.பெ.சீ.யும், ப.கா.வும், ஞானசேகரனும், இராசரத்தினமும் நானும் ஈடுகொடுத்து நடக்க என்னதான் முயன்றாலும் ஓரடி முந்தியே போய்க்கொண்டிருக்கும் இந்தக் கால்கள். எந்த ஊரில் இருந்தாலும் பார்க்கச் சென்றால் பேருந்து நிலையம் வரை கூடவே நடந்து வந்து வழியனுப்பிவிட்டுச் செல்லும் அந்தக் கால்கள்... ' ---- இக்பால் மீரா ஒரு சினேகமழை... 'இறுதியாக நினைத்து மகிழ்வதற்கு மனிதநேயர்களிடம் கண்டதும் கொண்டதுமான நட்புதான் இருக்கும் என்று நம்புகிறேன். முதல் நாள் காட்டிய அன்பையும் பரிவையும் வாழ்வின் இறுதிவரை காட்டுபவர்களை நினைத்துப் பார்க்கும்போது அவர்கள் காட்டும் அன்பும் பரிவும் அவர்களது இயல்பு என்ற முடிவுக்கு வருகிறேன். கவிஞர் மீரா அவர்கள் இயல்பும் அதுதான். '---- இன்குலாப் மீரா ஒரு கனவு... 'மீரா உடல்நலக் குறைவினால் சிறைப்பட்டுவிட்டார் என்று அறிந்து சிவகங்கை போனேன். மனம் கனத்துக் கிடந்தது. அண்ணி, பஞ்சு வந்திருக்கிறார் என்றவுடன் எழுந்து வந்தார். தாடியோடு கூடிய அந்த முகத்தைப் பார்க்கப் பார்க்க எனக்கு அழுகையாக வந்தது. சமாளித்துக் கொண்டு 'என்ன அண்ணே இது ? '-அவரும் கலங்கினார். 'கி.ராஜநாராயணன் எப்படி இருக்கிறார் ? '- விசாரித்துப் பேச்சை மாற்றினார். 'படுக்க வைத்து விட்டது ' என்பதுதான் அவரால் சகித்துக்கொள்ள முடியாத துயரமாக இருந்தது. ' ---- க.பஞ்சாங்கம் மீரா ஒரு அசராஅலை... 'அப்போது சிவகங்கையிலிருந்து சென்னைக்கு திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகத்தின் ஒரே பேருந்துதான் இருந்தது. வசதியான சாய்வு இருக்கைகள் இருக்காது. சென்னையிலிருந்து சிவகங்கை வந்தால் நாள் முழுக்கத் தூங்கினாலும் அழுப்புத் தீராது. ஆனால் பயணங்களில் அவருக்கிருந்த ஆர்வம் அதிசயமானது. சென்னையிலிருந்து காலையில் வருவார். ஒன்பது மணிக்கு மதுரைக்கு கிளம்புவார். திருச்சி,பிறகு பொள்ளாச்சி, கோயம்புத்தூர் , கூட்டங்கள், சந்திப்புகள், பதிப்பகவேலைகள், ஒரு சாம்பல் நிறப்பெட்டியுடன் கிளம்பிவிடுவார். உடன் சதுரம் சதுரமாக சசியின் புத்தகக்கட்டுகள். அவர் வாழ்நாளின் பெரும்பகுதி பயணங்களிலேயே கழிந்தது. மதுரையிலிருந்து சிவகங்கைக்கு வரும் கடைசி இரவுப் பேருந்துகளில் குறைந்தது வாரம் இரண்டு முறையாவது அவரைப் பார்க்க முடியும். இத்தனை உழைப்புக்கிடையில் கேட்பவருக்கெல்லாம் முன்னுரை எழுதினார். பாரதி நூற்றாண்டு விழா நடத்தினார். நவீன வாசனையற்ற செம்மண் நிலத்தில் கவிதை இரவு நடத்தினார். புத்தகங்கள் மீதான அவரது காதல் அளவிடமுடியாது. வீட்டில் திரும்பும் இடமெல்லாம் புத்தகங்கள். கையெழுத்துப் பிரதிகள். வடிவமைப்பு பற்றியும் புத்தகங்களைப் பற்றியும் ஆர்வமாகப் பேசுவார் ' ---- செழியன் மீரா ஒரு விருது... 'வாழ்ந்த வாசம் மட்டும்தான்... மீராவின் குடும்பம் சுவைக்க முடிந்த அவரின் சொத்து. அவரின் பெட்டியில் இருந்தவையெல்லாம் ஒரு வேட்டியும் நூறு ரூபாய்வரை கொடுத்து வாங்கும் சட்டையும் தவிர முழுவதும் பலரின் எழுத்துக்கள்தான். இன்று பேசப்படும் பல புத்தகங்கள் அவர் தீண்டியதால் கலை வடிவமானவை. வார்த்தைகளையும் வரிகளையும் செதுக்கி அழகியல் கொள்ள மறைந்து தொழில் செய்தவர். படைப்பாளியாக மட்டும் மீரா செயல்பட்டு இருந்தால் தமிழ் இலக்கியத்திற்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்திருக்கும் '---- க.வை.பழனிசாமி மீரா ஒரு வானம்... 'குறிப்பாக, எழுதுபவர்களுக்கு வலதுகையில்தான் அதிக இயக்கம். வலது கையில் கடிகாரம் கட்டிக்கொண்டால் பார்த்துக்கொண்டிருக்கும் வேலையை நிறுத்தாமலே நேரம் பார்த்துவிடலாம். வலது கைக்கு கடிகாரத்தைக் கொண்டு வந்து கட்டிய காரணம் இது என்ரு வெகு சிலர்க்கே தெரிந்திருந்தது. அவர்களுள் கவிஞர் மீரா ஒருவர். மீரா உலக மக்கள் எல்லோரும் கவிதை எழுத வேண்டுமென்றும் முடிந்தால் அவை அத்தனையும் புத்தகங்களாகப் போட வேண்டுமென்றும் நினைத்தார். கவிதை வெளிப்பாட்டில் அவ்வளவு விரிந்த மனம் மீராவுக்கு ' --- கந்தர்வன் மீரா ஒரு யுகம்... 'எனது மனைவியை அழைத்துக்கொண்டு சிவகங்கையில் அவர் வீட்டுக்குச் சென்றபோது, மனித நேயராக கடைசி நிமிடம் வரை வாழ்ந்த ஒரு கவிஞன் மரணமற்ற பெருவாழ்வில் இருப்பதையும் அதே சமயம் அவர் வசித்து வந்த அந்தத் தேகம் அசைவற்றுக் கிடந்ததையும் பார்த்துக் கலங்கினேன். கை குவித்தேன் '---- பெ.சிதம்பரநாதன் மீரா ஒரு புத்தகச்சந்தை... 'புத்தகம் சம்பந்தமாய் வந்தாய் -- ஒரு புத்தகச் சந்தையில் பார்த்துக் கொண்டோம் புத்தகமாகவே ஆனாய், நண்பனே. '---- கி.ராஜநாராயணன் மீரா ஒரு தராசு... 'மீரா என்ற கல்லூரி ஆசிரியரின் போராட்ட முகத்தையும் நாம் உற்று நோக்கவேண்டும். எமக்குத் தொழில் கவிதை என்பதை முகமூடியாய் அணிந்து கொண்டு தன்னை அவர் தனிமைப்படுத்திக் கொண்டதில்லை. கல்லூரியில் நேருக்கு நேர் நின்று எதிர் கொண்ட போர்க்குணம் அவருடையது. ஆசிரியர் நலன் காப்பதற்கான போராட்டங்களின்போது உண்ணாவிரதம் இருப்பதற்கோ, கைதாகிச் சிறைச்சாலைகளில் அடைபடுவதற்கோ அவர் என்றைக்கும் பின்வாங்கியதே இல்லை. கல்லூரி ஆசிரியர்களின் போராட்டத்தின் ஒரு பகுதியாக அண்ணா சாலையில் ஒரு நாள் முழுக்கச் சுட்டெரிக்கும் வெயிலில் உடலை வருத்திக்கொண்டு உண்ணாவிரதம் இருந்ததை இன்று நினைதாலும் நெஞ்சம் பதைக்கும் '---- இளம்பாரதி மீரா ஒரு இளகியநிலவு... 'எழுத்தாளர்கள்மீது மிகுந்த மரியாதையும் அக்கறையும் கொண்டவராக இருந்தார் மீரா. அவர்களில் பலர் வாழ்க்கை நன்றாக இல்லையே என்று வருந்தியிருக்கிறார். மலையாள எழுத்தாளர்கள்போல் அவர்களுக்கும் போதிய வருமானம் உத்திரவாதம் செய்யப்படவேண்டும். அதற்காக அங்கிருப்பதுபோல் எழுத்தாளர் கூட்டுறவு பதிப்பகம் தோன்ற வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார் ' ---- எஸ்.விஸ்வநாதன் மீரா ஒரு உலகம்... 'மீரா வெறும் கவிஞர் மட்டுமன்று. அவர் சிறந்த வாசகர். பேராசிரியத் தன்மையற்ற பேராசிரியர். மனிதர்கள் சாகிறபோது அவர்களுக்குள் உலகங்கள் சாகின்றன என்றும் சொல்வார்கள். கவிஞர் மீரா மறைந்தபோது எனக்குள் பல இலக்கிய உலகங்கள் இறந்து போய்விட்டன ' ---- இந்திரன் மீரா ஒரு ஒளி... 'திராவிட முன்னேற்றக்கழகம், இடதுசாரி இயக்கங்கள், பல்கலைக்கழகங்கள், மூட்டா, பதிப்பகத்துறை, படைப்பாளிகள், சாகித்ய அகாதமி, தமிழ் வளர்ச்சித்துறை இவற்றின், இவர்களின் எந்த வெளிச்சமும் மீராவின் மீது உரிய நேரத்தில் உரிய அளவில் விழவில்லை ' ---- கல்யாண்ஜி மீரா ஒரு சமத்துவப்புறா... 'புதுமைக்கவிஞன், போர்க்களப்புலவன், அறத்தின் நாயகன் , அனைவர்க்கும் தோழன், சமத்துவ வேட்கையால் சரித்திரம் படைத்தோன், தன்னலமின்றித் தமிழ்ப்பணி புரிந்தோன், தமிழ் உள்ளவரை அவன் புகழ் வாழும் ! ' ---- தி.க.சிவசங்கரன் மீரா ஒரு நம்பிக்கை... 'கவிஞர் மீரா நம்பிக்கை மனிதர். தனக்கு எதிராக உலகமே சுழன்று தாக்கிய போதிலும் நம்பிக்கை மனிதர்கள் தளர்ந்து விடுவதில்லை. கம்பீரமாக எழுந்து நின்று தனக்காக வாழ்க்கையைப் பிரபஞ்சத்தில் பதிவு செய்து விடுகிறார்கள் ' ---- சி.மகேந்திரன் மீரா ஒரு தோழமைக்கடல்... 'இப்படியொரு கலப்படமற்ற அன்பை, நிபந்தனைகளற்ற நட்பை இனி யாரிடம் பெறப் போகிறோம். பூமிக் கிண்ணத்தில் வார்க்கப்பட்ட அவரது வாழ்வென்னும் பாலினை ஓர் துளியும் மிச்சம் வைக்காது அருந்திவிடும் அன்னம். ஆம் அவரது வாழ்வும் கலப்படமற்றது. அது அகரம். ' ---- கலாப்ரியா மீரா ஒரு சரி... 'அன்னம் பதிப்பகத்தின் நூல்களையெல்லாம் அச்சிடத் தாமே அகரம் என்ற பெயரில் அச்சகம் ஒன்றையும் நடத்தினார். பிழைகள் இல்லாது நூல்களை அச்சிட்ட பெருமை அகரத்திற்கு உரியது '---- பு.இராசதுரை மீரா ஒரு முரண்... 'மீராவின் கனவுகள் ஏதும் நனவாகுமா என்பது தெரியவில்லை. ஆனாலும் அவர் கனவொன்று பொய்த்ததை இங்கு சொல்ல வேண்டும். மீரா நாத்திகராக வாழ்ந்தார். தனது சாவிலும் கூட அவர் அவ்வாறே வாழ முடியும் என கற்பனைகள் செய்திருக்கக்கூடும். பகுத்தறிவு, பொதுவுடைமைச் சிந்தனைகள் மீதும் இயக்கங்கள் மீதும் பெரும் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார். ஆனாலும் அவரது உடல் இந்து மதச் சடங்குகளோடு எரியூட்டப்பட்டது. தன்னை ஏங்கல்ஸின் மாணவன் என்று பெருமையோடு தன் காதலியிடம் அறிமுகம் செய்து கொண்டவர் அவர். அவரது மரணத்தையும் விஞ்சிய அழுத்தத்தை அவரது உடல் எரியூட்டு உண்டாக்கியது. பாரதி குடில் உருவாக்க அவர் நினைத்த இடத்தில் அவரை அடக்கம் செய்திருக்கவேண்டும். '---- குருசாமி மயில்வாகணன் மீரா ஒரு கறையிலாக்கவிதை... 'மீரா ஓர் இனிய கவிதை. மீரா கடவுள் எழுதிய கவிதையா... காலம் எழுதிய கவிதையா... சமூகம் மாற்றி வடிவமைத்த காவியமா... ? ' ---- தனுஷ்கோடி ராமசாமி மீரா ஒரு வரலாறு... 'உ.வே சாமிநாதய்யரால் பல பழைய இலக்கியங்கள் நமக்குக் கிடைத்தன. மீரா இருந்திராவிட்டால் நமக்குப் பல புதிய இலக்கியங்கள் கிட்டியிரா ' ---- நீலமணி மீரா ஒரு காதலன்... 'குழல் ஊதும் கண்ணனைக் காதலித்தால் மீரா. இனிதான பாடும் குரலுக்காக என்னைக் காதலித்தார் கவிஞர் மீரா சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளைங்கலைப் பட்டம் முதலாண்டு படித்த காலம் 1979. எங்களுக்கிடையே காதல் அரும்பிய காலம் அது. ' ---- கே.ஏ.குணசேகரன் மீரா ஒரு பன்முகவெண்பா... 'சமணர் மொழியில் சொன்னால் அவர் ஒரு பக்குவ சீவன். பேராசிரியர் கூற்றில் சொன்னால் அவர் புதுக்கவிதையின் உ.வே.சா. மூட்டாவினர் கருத்துப்படி அவர் கோரிக்கைகள் நிறைவேற்றிய கோடிக்கைகள். அரசுக்கல்லூரி ஆசிரியர் பார்வையில் அவர் கல்லூரி ஆசிரியரின் குரல். சுருங்கச் சொன்னால் மனிதம் என்பதின் மருதுவின் கோட்டோவியம் அவர். '---- க.முத்துச்சாமி மீரா ஒரு சிவகங்கை... 'என் தந்தையையொத்த வயதில் ஒரு நெருங்கிய நண்பரைப்போல் மூத்த சகோதரரைப்போல் தனது இறுதிக் காலங்களில் என்னோடு அவர் கொண்ட அன்பு . சிவகங்கை எனும் ஊரின்மீதான பாசத்தைத்தான் விதைத்து விட்டிருக்கிறது. மீரா அவர்களின் ஊர்ப்பாசம் தாய்ப்பாசத்திற்கு நிகரானது. '---- சந்திரகுமார் 'மீரா எனக்குச் சிறுகதவாய் இருந்தார். லேசாகத் தொட்டாலே திறந்து கொள்ளும் கதவு. மீராவுக்கு ரொம்பவும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன் நான். ஆனால், அந்த மீராவை நேரிலோ கூட்டங்களிலோ ஒரு முறை கூட நான் பார்த்ததில்லை. சந்தித்ததில்லை. பெரிய இழப்பாக உணர்கிறேன் இப்போது ' என்று சொல்லும் பெருமாள் முருகனின் வார்த்தைகள் எனக்கும் பொருந்தும்... காரணம் நான் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்திருந்த அந்த மாகவியின் படைப்புகளிலேயே எனக்குள் அவன். பார்த்ததில்லை... பேசியதில்லை... பழகியதில்லை... இருப்பினும், மீரா எனும் வார்த்தையும் அது செய்த இயக்கமும் என் ஆத்ம நெருங்குதலின் இனிய பதியமாய் என்றென்றும்... மீரா என்ற புல்புல்லின் நினைவோசை அவர் படைத்த சாகாத வானத்தில் சஞ்சரித்துக்கொண்டுதான் இருக்கும் எந்நாளும்... விடியலின் ஒவ்வொரு பூபாளமும் மீரா என்ற கீர்த்தனையை இசைத்துக் கொண்டுதான் இருக்கும் யுகத்தின் இறுதிவரை... மீரா நம்மை விட்டுப் பிரிந்த வருடங்கள் தங்களின் தொலைவைச் சொல்லலாம் ஆனால், தோன்றி மறைந்து மறையாமல் இருத்தலின் உயிர்ப்பை உணர்கின்ற ஓவ்வொரு படைப்பாளிக்குள்ளும் மீரா வாழ்கிறார்... ---- நெப்போலியன் சிங்கப்பூர்